கன்னட திரையுலகில் போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டதாக கைதான நடிகை ராகிணி திவேதி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திரையுலகில் போதைப் பொருள்

திரையுலகினர் பலருக்கு போதைப் பொருள் பழக்கம் இருப்பதாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையும் வலுக்கத் தொடங்கியது. இந்த நிலையில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 29ம் தேதி பெங்களூருவில் நடத்திய அதிரடி சோதனையில், கன்னட டிவி நடிகை அனிகா மற்றும் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த முகமது அனூப், பாலக்காட்டை சேர்ந்த ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் கன்னட மற்றும் மலையாள சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்தது தெரியவந்தது.

அதிரடி கைது

இந்நிலையில், கன்னட பத்திரிக்கையாளரும், திரைப்பட இயக்குநருமான இந்திரஜித் லங்கேஷ், கன்னட திரையுலகில் போதை பொருள் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் குறித்த விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். மேலும் சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு சென்ற அவர், கன்னட திரையுலகில் யார், யார் போதை பொருள் பயன்படுத்துகிறார்கள் என்ற விவரத்தையும் அளித்துள்ளார். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், பிரபல நடிகை ராகினி திவேதியின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பின்னர் ராகினியை கைது செய்தனர். மேலும் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணிக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

‘சிங்கம்’ பட பாணியில் கடத்தல்

தற்போது நடிகை ராகிணி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த வாலிபர் லோயம் பெப்பர் சம்பாவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சூர்யா நடித்த சிங்கம்-2 பட பாணியில், ஆப்பிரிக்காவில் இருந்து போதைப் பொருட்களை கடத்திக் கொண்டு வந்து, உள்ளூர் நபர்கள் மூலம் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. போதைப் பொருள் விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ராகினி திவேதியின் நண்பர் ரவிசங்கருடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். கன்னட திரை உலகத்தினர் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கு ரவிசங்கர் மூலமாக போதைப்பொருட்களை ‘சப்ளை’ செய்யப்பட்டுள்ளது. இதுதவிர முக்கிய பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கும் லோயம் பெப்பர் சம்பா போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here