‘சிங்கம்’ திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பதை குறிப்பிட்டு மீண்டும் நடிகர் சூர்யாவை வம்பிழுத்துள்ளார் மீரா மிதுன்.

‘சிங்கம்’

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது சிங்கம் படம் தான். அவர் பேசும் வசனமும், மீசையும், கெத்தான போலீஸ் கதாபாத்திரமும் அனைவரையும் கவர்ந்தது. ஹரி இயக்கத்தில் உருவான சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததையடுத்து, அதன் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியாகின. அந்த இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இதனையடுத்து இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அஜய் தேவ்கன் நடிப்பில் உருவான ‘சிங்கம்’ திரைப்படம் பாலிவுட்டிலும் சக்கை போடு போட்டது.

மோடி அறிவுரை

நேற்று ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி முடித்த இளம் அதிகாரிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார். அப்போது பல்வேறு விஷயங்களை பகிர்ந்த மோடி, சூர்யாவின் சிங்கம் படத்தை சுட்டிக்காட்டிப் பேசினார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது; காக்கி சீருடையின் அதிகாரத்தினை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு பதிலாக அதனை அணிந்து கொள்வதில் நீங்கள் முதலாவதாக பெருமை கொள்ள வேண்டும். உங்களுடைய காக்கி சீருடைக்கான மரியாதையை ஒருபொழுதும் இழக்காதீர்கள். காவல்துறை அதிகாரிகள் பணியில் சேரும்பொழுதே, ஒவ்வொருவரும் நம்மை கண்டு பயப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக ரவுடிகள் பயப்பட வேண்டும் என நினைக்கிறார்கள். ‘சிங்கம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் பாதிப்பால் போலீஸ் அதிகாரிகள் தங்களை அசாத்தியமானவர்களாக கருதிக்கொண்டு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து விலகிவிடக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மீண்டும் சர்ச்சை

எப்பொழுதும் சூர்யாவையும், விஜய்யையும் வம்புக்கு இழுக்கும் மீரா மிதுனுக்கு, இது ஒரு நல்ல சாக்காக அமைந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி சொன்ன விஷயத்தை கையில் எடுத்தார் மீரா மிதுன். இதுபற்றி டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “வாவ் நரேந்திர மோடி, என்ன ஒரு பர்பெக்ட் ஸ்டேட்மெண்ட். இதுபோன்ற படங்களால் சமுதாயம் கெட்டுப் போகிறது. வளருங்கள் சூர்யா, சமுதாயத்தை கெடுக்காமல் உண்மையுடன் இருக்கும் நல்ல தரமான படங்களை எடுங்கள். உங்கள் தோற்றத்துக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடியுங்கள்”. இவ்வாறு மீரா மிதுன் குறிப்பிட்டுள்ளார். மீராவின் இந்தப் பதிவிற்கு சூர்யா ரசிகர்கள் பல மோசமான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அவரது தோற்றத்தைப் பற்றி பேசியதால், சூர்யா ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here