வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் நாகசைதன்யாவுடன் புதுப்படம் ஒன்றில் இணையப் போவதாக தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ரசிகர்களை கவர்ந்த நடிகை

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். பிறகு விஜய் டிவிக்கு தாவிய அவர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அனைவராலும் ரசிக்கப்பட்டார். அழகான மற்றும் எளிமையான தோற்றத்தை பார்த்த பல ரசிகர்கள், அவரை பெருமளவு வரவேற்றனர். பிறகு ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அழகான பேச்சும், கவர்ச்சியில்லாத உடையும் இவரை சினிமா பக்கம் கொண்டு வர உதவி செய்தது. கவர்ச்சியை காட்டி பல நடிகைகள் சினிமாவிற்கு வந்தாலும், கவர்ச்சி இல்லாமல் தனது திறமையாலும், பேச்சாற்றலாலும் வெள்ளித்திரையில் வெற்றிபெற்றவர்களை பல பேர் தமிழ் சினிமா பார்த்து உள்ளது. அந்த வகையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருப்பவர்களுள் பிரியா பவானி சங்கர் முக்கியமானவர்.

வெற்றி நாயகி

‘மேயாத மான்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பிரியா. பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்தார். குருதி ஆட்டம், பொம்மை போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது கசடதபற, வான், இந்தியன் 2 போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற பிரியா பவானி ஷங்கர், தெலுங்கில் ஸ்ரீகாந்த் ரெட்டி இயக்கிய “அகம் பிரம்மாஸ்மி” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க இவருக்கு தற்போது வாய்ப்பு வந்துள்ளதாக தெலுங்கு வட்டாரத்திற்கு ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. சமந்தாவின் கணவரும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான நாகசைதன்யா நடிக்கும் படத்தில் பிரியா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. “தேங்க்யூ” என்ற பெயரில் இப்படம் உருவாகப் போகிறது. பிரியா பவானி சங்கர் இப்படத்தில் ஒப்பந்தமானது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், இது உண்மையான செய்தியாக இருந்தால், தெலுங்கிலும் கண்டிப்பாக ஒரு நல்ல இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here