வெப்பச்சலனம் காரணமாக சேலம், கரூர், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சிமலை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், கரூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தலா 7 செ.மீ., பாலக்கோடு, சமயபுரம் தலா 6 செ.மீ., வலங்கைமான், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, திருச்சி சந்திப்பு, வேலூர் மாவட்டம் கதநடப்பட்டி தலா 5 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், குளித்தலை, மேட்டூர், பென்னாகரம், ஆற்காடு, திருபனபந்தால் தலா 4 செ.மீ., தோகைமலை, வேலூர், ஆரணி, சின்னக்கல்லார், மணலூர்பேட்டை, வேங்கூர், காரியாபட்டியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், கேரளா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here