பொதுமக்களின் நலன் கருதியே இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் ஆய்வு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான மூன்று புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். அதனைதொடர்ந்து 18 ஆயிரத்து 589 பயனாளிகளுக்கு ரூ.55.03 கோடி மதிப்பிலான
நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். பின்னர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.

இ-பாஸில் தளர்வு

அப்போது பேசிய அவர், ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட ரூ 1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பதாகவும், தோல், காலணி தொழிற்சாலைகளுக்கு தேவையான உதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர், மக்களின் நலன் கருதியே இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இ-பாஸ் பெற்று வெளியே செல்ல வேண்டும் என்றும் கூறினார். மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், கொரோனா தொற்றை குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். கொரோனா வைரஸை முழுமையாக ஒழிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here