கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டி பிரபலங்களும், ரசிகர்களும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தீவிர சிகிச்சை

லேசான கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஐந்தாம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பிறகு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, மருத்துவமனையின் 3வது மாடியிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து 6வது மாடியிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின் அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கூட்டுப் பிரார்த்தனை

இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர், எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே நடிகர், நடிகைள் பங்கேற்கும் மவுன கூட்டு பிரார்த்தனை நடைபெற இருப்பதாக அறிவித்தனர். அதன்படி நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அவரவர் வீட்டில் இருந்தபடியே, எஸ்.பி.பி பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு பிரார்த்தனை செய்தனர். இயக்குநர் பாரதிராஜா தலைமையில், நடிகர்கள் பிரபு, சத்யராஜ், நடிகைகள் சரோஜாதேவி, ராதிகா சரத்குமார், இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், தங்கர் பச்சன், பார்த்திபன், சேரன், கே.எஸ்.ரவிக்குமார், லிங்கு சாமி உள்ளிட்ட பலர் வீடியோ மூலம் கலந்துக் கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here