தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 5 செ.மீ. மழையும், பந்தலூரில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் 2 செ.மீ. மழையும், ஏற்காடு, மேல் பவானி, அவலாஞ்சி, ஹாரிசன் எஸ்டேட் , பிரையர் எஸ்டேட் பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here