நடிகர் விஜய் பற்றியும் அவரது மனைவி பற்றியும் தரக்குறைவாக பேசிய நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சர்ச்சை நாயகி

சர்ச்சைக்கு மறுபெயர் என்றால் அது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு சர்ச்சைக்கு சொந்தமான இவர், தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் உள்ளவர்களே அதிகம் என்றும் நெப்போடிசம், மாஃபியா போன்றவைகள் அனைத்தும் தலைவிரித்து ஆடுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். நெப்போடிசம் புரொடக்ட்ஸ் மட்டும்தான் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள் எனத் தெரிவித்த அவர், ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்தார். மேலும் கமல்ஹாசனை சாடிய மீரா, திரிஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார். பின்னர் சூர்யாவை வம்பிழுத்த மீரா மிதுன், அவருக்கு நடிக்கவே தெரியாது என்றும் சாதாரண காட்சிக்கு கூட 20 டேக் வாங்குவார் என்றும் கூறி கிண்டலடித்தார். நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரது மனைவிகளைப் பற்றி தரக்குறைவாக பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார் மீரா மிதுன். தொடர்ந்து நடிகர் விஜய்க்கு எதிராகவும் அவரது ரசிகர்களுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் பொருமையிழந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்து வருகின்றனர்.

குவியும் கண்டனம்

மீரா மிதுனின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், தனது டுவிட்டர் பக்கத்தில் IGNORE NEGATIVITY என்று பதிவிட்டார். இந்த டுவீட்டை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர். இதனிடையே, நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது; விஜய் நெஞ்சில் குடியிருக்கும் பிரியமான நண்பர்களே. துணை நடிகை மற்றும் மாடல் என்று சொல்லப்படும் மீரா மிதுன் என்பவர் நமது உயிரினும் மேலான விஜய் பற்றியும், உயிர் அண்ணியார் பற்றியும் சமூகவலைத்தளங்களில் கீழ்த்தரமாக பதிவு செய்துள்ளார். அவரை வண்மையாக கண்டிப்பதுடன், புதுக்கோட்டை ரசிகர்கள் சார்பில் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். மீரா மிதுன் தொலைக்காட்சி மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும், ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சும்மா இருக்க மாட்டோம்

நடிகர் விஜய் குறித்தும், அவரது மனைவி குறித்தும் மீரா மிதுன் அவதூறாக பேசியிருப்பது ரசிகர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பற்றியும், அவருடைய குடும்பம் பற்றியும் பேசுவதற்கு மீரா மிதுனுக்கு தகுதி இல்லை என்றும் இன்னொரு முறை அவர் அவதூறாக பேசினால், கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்றும் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here