பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமான காரணத்தால் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமலும், எப்போது திறக்கப்படும் எனத் தெரியாமலும் இருந்து வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முதல்வர் அறிவிப்பார்

இந்த நிலையில், நேற்று நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இருக்காது என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவியது. இதற்கு பள்ளிக்கல்வித் துறை மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து வரும் 10ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனத் தெரிவித்தார். கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here