பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய கனமழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய சேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தங்கரை, ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும், புதுக்கோட்டை, செய்யூர் பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர், லப்பைக்குடிகாடு, கீழ் அணை, மேட்டூர், கடலூர் மாவட்டம் கிழச்செருவை ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கீரனூர், நத்தம், சீர்காழி, ஆத்தூர், மருங்கபுரி, சிதம்பரம், திருவாலங்காடு பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here