சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கவுள்ளதையொட்டி அரைமணி நேரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இந்தத் தொடர் வரும் 27ம் தேதி முதல் ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நோய்த்தொற்று பரவிக் கொண்டு தான் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்புகள் நடத்தப்படாததால், ஏராளமான தொழிலாளர்கள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டனர். தொலைக்காட்சிகளில் ஏற்கனவே ஒளிபரப்பான சீரியல்களும், திரைப்படங்களும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன.

படப்பிடிப்பு தொடக்கம்

இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, சில தினங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சீரியல்களின் அடுத்த இன்னிங்சை தொடங்கி உள்ளனர் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும். ஷூட்டிங் ஸ்பாட்டில் பாதிப்பு அதிகமாக இருக்குமோ என்று அஞ்சியிருந்த நடிகர், நடிகைகளுக்கு மத்தியில், முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் சீரியல் சூட்டிங் சில நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மிகவும் நெருங்கிய காட்சிகள் மற்றும் ரொமான்டிக் காட்சிகள் அனைத்திற்கும் தடை செய்யப்பட்டு உள்ளது. இருந்தாலும் புது எபிசோடுகள் வருவதால் வீட்டில் முடங்கி இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இது ஒரு நற்செய்தி என்றே சொல்லலாம். அதனால் சீரியல்கள் ஒளிபரப்பாகும் நாளை எதிர்பார்த்து காத்திருகின்றனர் இல்லத்தரசிகள்.

சின்னத்திரையில் யாஷிகா

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு நடிகைகள் விசிட் கொடுத்தாலோ அல்லது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலோ பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலில், நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். அதற்கான புதிய புரொமோவும் வெளியாகியுள்ளது. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யாஷிகா ஆனந்த், டிவி சீரியலில் வரப்போகும் செய்தியை கேட்ட இளசுகளும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சிபு சூரியன், பிரியங்க நல்கரி, வடிவுக்கரசி போன்ற பலர் நடித்து வரும் ‘ரோஜா’ சீரியல், அனைவராலும் பாராட்டும், வரவேற்பும் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் யாஷிகா ஆனந்தும் இணைந்துள்ளதால், பல திருப்பங்களுடன் ‘ரோஜா’ சீரியல் வெளிவரும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here