சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வீடியோவை நீக்கும்படி சிபிசிஐடி போலீசார் தன்னை அச்சுறுத்தியதாக பிரபல பாடகி சுசித்ரா தனது டுவிட்டரில் பதிவு வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ விசாரணை

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ துவங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ள நிலையில், வழக்கு குறித்த ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், சாத்தான்குளம் காவல் நிலையம், கோவில்பட்டி சிறைச்சாலை, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஜெயராஜ் – பென்னிக்ஸின் வீட்டிற்கு சென்று அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் சாட்சி அளித்துள்ள ஜெயராஜ் – பென்னிக்ஸின் உறவினர்கள் 2 பேரை உடன் அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள், மருத்துவமனையில் அன்று நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது.

வீடியோ ரிலீஸ், சிபிசிஐடி எதிர்ப்பு

இந்தநிலையில், பாடகி சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சாத்தான்குளம் தந்தை – மகன் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து சுசித்ராவின் வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிசிஐடி அறிக்கை வெளியிட்டிருந்தது. சுசியின் வீடியோவில் இருக்கும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அது போலீசாருக்கு எதிராக தூண்டிவிடுவதைப் போல இருப்பதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. எனவே அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பகிரவும் வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே சுசித்ரா தனது வீடியோவை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார்.

சுசி குற்றச்சாட்டு

இந்நிலையில் வீடியோ நீக்கப்பட்டது குறித்து சுசித்ரா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; சிபிசிஐடி போலீசார் அழைத்தார்கள். போலி செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தினார்கள். எனது வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் நான் வீடியோவை நீக்கியிருக்கிறேன். மக்கள் இந்த வழக்கை கவனிக்க வேண்டும். ஏராளமான, மோசமான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here