தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மனம்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நடிகர் சூர்யா ஆர்வமாக உள்ளதாக இயக்குநர் விக்ரம் குமார் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் ’24

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ’24’. பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம், 2016ம் ஆண்டு மே மாதம் வெளியானது. இப்படத்தில் நித்யா மேனன், சமந்தா, சரண்யா பொன்வண்ணன், அஜய், மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த ’24’ படத்துக்கு, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.

தமிழில் ரீமேக்

இதனிடையே, ’24’ படத்தை இயக்கிய விக்ரம் குமார் தெலுங்கில் ‘மனம்’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட்டானது. இதனையடுத்து ‘மனம்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நடிகர் சூர்யா தன்னிடம் பேசியதாக இயக்குநர் விக்ரம் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; முதலில் விக்ரமை வைத்துதான் ’24’ படம் தொடங்கப்பட்டது. பல பிரச்சனைகளால் இந்த படத்தை பண்ண வேண்டாம் என்று நிறுத்துவிட்டோம்.

ரசிகர்களிடம் வரவேற்பு

அந்தப் படம் கைவிடப்பட்டவுடன், தெலுங்கில் ‘மனம்’ படத்தை இயக்கினேன். மனம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த கதையை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்றால் அதற்கு நடிகர் சூர்யாவின் குடும்பம் தான் கரெக்ட். ஆனால், சூர்யாவுக்கும் ‘மனம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்ற ஆசையிருந்தது. சூர்யா, கார்த்தி, சிவகுமார், ஜோதிகா ஆகியோரை வைத்து ‘மனம்’ படத்தை எடுக்க முடியும். அதற்காக அவரைச் சந்தித்தேன். ஆனால் முதலில் 24 படக்கதை சூர்யாவுக்கு பிடித்ததால், அந்த படத்தை எடுத்தோம். படமும் நான் எதிர்ப்பார்த்ததைவிட நன்றாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதேபோல், கண்டிப்பாக ‘மனம்’ திரைப்படமும் சூர்யா குடும்ப ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும்.

அக்கினேனி கேரக்டர்?

‘மனம்’ தமிழ் ரீமேக்கில் சூர்யா குடும்பத்தினர் அனைவரும் நடித்தாலும், இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அகில் அக்கினேனி கேரக்டரை எந்த பிரபலம் நடிப்பார் என்று சூர்யா குடும்பத்தினர், ரசிகர்களிடம் அறிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். இவ்வாறு இயக்குநர் விக்ரம் குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here