தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு விசாரணையை வருகிற 11ந் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் கேள்வி

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினீஷ் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டும் அரசு மீது அதிருப்தி தெரிவித்தனர். இதுதொடர்பாக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதுவே சரியான நேரம்

தமிழக அரசு தரப்பில் ஆஜராகிய தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா அதிகரிக்கும் என்பதால், இதுவே 10ம் வகுப்பு தேர்வை நடத்த சரியான நேரம் என்றும், தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் தமிழக அரசு தரப்பில் தேர்வு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை ஒத்திவைப்பு

‘கொரோனா பாதிப்பை பொருத்தவரை தற்போது அபாய நிலை இல்லை. அக்டோபர், நவம்பரில் கொரோனா உச்ச நிலையை அடைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, தேர்வுகளை தள்ளி நடத்துவதால்தான் அபாயம் அதிகரிக்கும் சூழல் உள்ளது, பேராபத்தாக முடியும்’ என அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். தமிழக அரசு விளக்கம் அளித்தும் ஏற்காத நீதிபதிகள், உடனே தேர்வை நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை, தேர்வை தள்ளி வைக்க முடியுமா என பரிசீலனை செய்யுங்கள் என கூறினர். அத்துடன், தமிழக அரசு சார்பில் கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here