நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3 மண்டலங்களாக பிரிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பாதிப்பின் அளவைப் பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்களை பிரித்து மத்திய சுகாதாரத் துறை இன்று பட்டியலை வெளியிட்டது.

கட்டுக்குள் வரவில்லை

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை  நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கான நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு மண்டலங்களின் கட்டுப்பாடுகள்


* சிவப்பு மண்டலமாக உள்ள பகுதிகளில் இந்த ஊரடங்கில் எந்த தளர்வும் இருக்காது.

* சென்னை, டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் சிவப்பு மண்டலமாக வருவதால் தமிழகத்தில் சென்னையிலும் இந்த ஊரடங்கு தளர்வு இல்லாத நிலையே தொடரும்.

* நாடு முழுவதும் மே 17 வரை பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் இயங்காது.

* ஓட்டல்கள், தியேட்டர்கள், உடல் பயிற்சி கூடங்களுக்கு அனுமதி இல்லை.

* மத வழிபாடுகள், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும். சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை தொடரும்.

* மக்கள் அதிகமாகக்கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது.

* சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏணைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும்.

* சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்.

* சிவப்பு மண்டலங்களில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி.

* அத்தியாவசிய தேவையின்றி இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் வெளியே வரக்கூடாது.

* முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளிவரக்கூடாது.

* சரக்கு போக்குவரத்து எந்த தடையும் இல்லை.


ஆரஞ்சு வண்ண பகுதிகளுக்கான அறிவிப்புகள்


* ஆரஞ்சு வண்ண மாவட்டங்களில் வாடகை கார்கள் ஒரு பயணியுடன் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும்.

* மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.

* மேலும் 2 வாரங்களுக்குச் சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.

பச்சை மண்டலங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்


* பசுமை மண்டலத்தில் பேருந்துகள் 50% பயணிகளுடன் மட்டுமே இயங்க வேண்டும். மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.

* 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம்.

* நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* பேருந்து டெப்போக்களில் 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும்.

* பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் இ-வணிகத்தில் அனுமதி.

* கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள், பீடா கடைகள் திறக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here