நாடு வளம் பெறவும், ஒற்றுமையுணர்வு ஓங்கிடவும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன் என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கூட்டணி பேச்சுவார்த்தை

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பிப்ரவரி 28 ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து, நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று (05.03.2024) மத்திய அமைச்சர் L.முருகன், தேசிய செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் H.ராஜா, பாஜக தமிழக பொறுப்பாளர் மற்றும் தேசியச் செயலாளர் அரவிந்த் மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.

இணைந்து செயல்பட முடிவு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கனவே எனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடியை பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here