விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

அரசியல் இயக்கம்

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது. அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மக்கள் இயக்க நிர்வாகிகள், இப்தார் நிகழ்ச்சிகளையும் நடத்தினர். மேலும் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ என்ற திட்டம் மூலம் ஏழைகளுக்கு மதிய உணவையும் அவர்கள் வழங்கினர்.

பணம் வாங்காதீர்

அண்மையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியிருந்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

முக்கிய ஆலோசனை

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு முழுவதும் மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் கவனம் செலுத்த போவதில்லை எனவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் பனையூரில் உள்ள இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் 234 தொகுதிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வரும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்டுகிறது. அதன்படி விஜயுடன் தொகுதி பொறுப்பாளர்கள், அணி நிர்வாகிகள் என 300 பேர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here