அதிமுகவினர் எவருக்கும், எந்த கட்சிக்கும் அடிமையானவர்கள் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு பதில்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்துள்ள அமலாக்கத்துறை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கை என்ன ஆனது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் வழக்கு நடைபெற்றுது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை இல்லை என்றும் இரண்டு மாதங்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இரண்டு மாதங்களுக்குள் வழக்கை முடிக்காவிட்டால் உச்ச நீதிமன்றமே சிறப்பு குழு அமைக்கும் என்று தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே செந்தில் பாலாஜியின் இல்லம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவேன் என்று செந்தில் பாலாஜி தெரிவித்தும், அவர் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு அவர் மேல் நடவடிக்கை எடுத்து கைது செய்தது. அவரது உடல்நிலை சரியில்லை என்று கூறியதும் அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்து முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பதற்றத்தோடு பேசுகிறார்

முதலமைச்சர் அவருக்கு பரிந்து பேசும்போது, ஏதோ ஒரு வகையிலான பதற்றத்தோடு பேசுகிறார். நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே மக்கள் திமுக பக்கம் ஆட்சியை வழங்கினார்கள். ஆனால் மக்களைப் பற்றி சிந்திக்காமல் இருக்கிறார் பொம்மை முதலமைச்சர். பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு முதலமைச்சர் செயல்படுகிறார். அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் பி.டி.ஆர். மனப்பொறுக்க முடியாமல் ரூ.30 ஆயிரம் கோடி உதயநிதி ஸ்டாலினும் =, சபரீசனும் வைத்துக் கொண்டு அதனை என்ன செய்வது என்றால் தெரியாமல் உள்ளனர் என்று ஆடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும் அவரை மருத்துவமனை சென்று பார்க்கின்றனர். செந்தில் பாலாஜி வாய் திறந்தால் தனது ஆட்சி பாதிக்கும் என்று ஸ்டாலின் அஞ்சி உள்ளார். முன்பு அவரது கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லத்தில் சோதனை நடைபெற்ற போது, இதுகுறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு ராஜா, கனிமொழி கைது செய்யப்பட்ட போதும் கூட ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. அப்போது சிறை சென்று அவர்களை ஸ்டாலின் பார்த்ததில்லை. ஆனால் செந்தில் பாலாஜிக்காக ஸ்டாலின் பதறுகிறார். செந்தில் பாலாஜி வசம் இருந்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மூலம் 3500 பார்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. பார்கள் மூலம் வரும் வருமானம் அனைத்தும் முதலமைச்சர் குடும்பத்துக்கே சென்று கொண்டிருக்கிறது. இதனை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் சொல்லக்கூடாது என்று அனைவரும் பயம் கொண்டுள்ளனர். இவர்கள் யாரும் செந்தில் பாலாஜிக்காக மருத்துவமனை செல்லவில்லை. இவர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை சென்று உள்ளனர்.

வளர்ச்சியை கண்டு கொள்ளவில்லை

திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் இரண்டு ஆண்டு காலம் எந்த துறையின் வளர்ச்சியையும் கண்டு கொள்ளவில்லை. திமுக ஆட்சி ஊழலில் தான் வளர்ச்சி அடைந்துள்ளது. இரண்டு ஆண்டு காலத்தில் ஒவ்வொரு துறையிலும் 3000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை சுரண்டியுள்ளனர். எதுவும் தெரியாமல் எழுதிக் கொடுப்பதை மட்டுமே பேசும் முதலமைச்சராக இவர் உள்ளார். தான் 4000 கோடி ரூபாய் ஊழலை நெடுஞ்சாலை துறையின் மூலம் செய்திருப்பதாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். ஆனால் வழக்கை தொடுத்த ஆர்.எஸ்.பாரதி வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். ஆனால் இந்த வழக்கை நாங்கள் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம் என்று நீதிமன்றத்தில் தன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. எதையும் தெரிந்து கொண்டு முதலமைச்சர் பேச வேண்டும். முதலமைச்சருக்கு தெம்பும் திராணியும் இருந்தால், இந்த வழக்கை சட்டரீதியாக சந்திக்க வேண்டும். செந்தில் பாலாஜி நல்லவர் என்ற தோற்றத்தை முதலமைச்சர் உருவாக்க பார்க்கிறார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்தது அதிகம் பேர் உள்ளனர் என்று தெரிவித்தார். அதிமுகவை இனி இந்த முதலமைச்சர் சீண்டி பார்க்கக் கூடாது. ஊழலுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் துணை போகக்கூடாது என்று கூட்டணியில் இருப்பீர்கள், நாளை வெளியே வருவீர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

தொட்டுப் பார்க்க முடியாது

அதிமுக பாஜகவின் அடிமை என்று முதலமைச்சர் சொல்கிறார். இதே பாஜகவுடன் 1999 ஆம் ஆண்டு திமுக கூட்டணி வைத்தது. அப்போது திமுக எம்பிகள் மத்திய அமைச்சரவையில் இடம் அளித்தார்களா? இல்லையா?. பச்சோந்தி போல நேரத்திற்கு ஒருமுறை நிறம் மாறுகிறார் முதலமைச்சர். அதிமுகவினர் எவருக்கும் எந்த கட்சிக்கும் அடிமையானவர்கள் இல்லை சொந்த காலில் நிற்பவர்கள் அதிமுகவினர், நாட்டு மக்களுக்காகவும், உரிமைக்காகவும் பாடுபடுபவர்கள் அதிமுகவினர், பதவியை விட நாட்டு மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே அதிமுகவினரின் லட்சியம். செந்தில் பாலாஜி இல்லத்தில் நடைபெற்ற சோதனையின் போது அதிகாரிகள் பலர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளனர். அப்போது முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. அதிமுகவில் ஒரு தொண்டனை கூட முதலமைச்சரால் தொட்டுப் பார்க்க முடியாது. இருபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை, எவராலும் அழிக்க முடியாது”. இவ்வாறு அந்த வீடியோவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here