நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைரலான நிலையில், அது பத்து மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

பிரம்மாண்ட தயாரிப்பு

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாகவும், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் விஜய் அடுத்த யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், விஜயும், வெங்கட் பிரபுவும் இணைய போவதாக இணையதளத்தில் தகவல்கள் கசிந்தது. இதனை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்திருந்தனர். தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். அது மட்டும் இல்லாமல் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் இப்படத்தை தயாரிக்கின்றது. இந்நிறுவனம் தயாரிக்கும் 25வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அதன்பிறகு 20 வருடங்கள் கழித்து தற்போது விஜய்யும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி அமைந்துள்ளது.

சந்தோஷத்தில் வெங்கட் பிரபு

இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு இந்த திரைப்படம் 12வது திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு மட்டுமே ரூ.50 கோடி சம்பளம் பேசி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த சம்பள விவகாரம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது; “என் மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி விஜய் அண்ணா. உங்களிடம் வாக்கு கொடுத்ததற்கு ஏற்ப பட அறிவிப்புக்கு பிறகே இந்த போட்டோவை பகிர்கிறேன். (இந்த போட்டோ 10 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது) கனவு நிஜமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து 10 மாதங்களுக்கு முன்பே இந்தப் படம் முடிவு செய்யப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here