ரஷ்மிகா மந்தனா குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி

இதுதொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “அன்புக்குரிய நண்பர்களே நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும் எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதரவிற்கும் முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் மீதும் என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும் அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

தவறாக கூறவில்லை

அண்மையில் ஒரு நேர்காணலின் போது என்னிடம் தெலுங்கு திரை உலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன். உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதில் அளித்தேன். இருப்பினும் துரதிஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை.

நல்ல நடிகை

இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ரஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகை சார்ந்த சக நடிகர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி மிகுந்த அன்புடன் ஐஸ்வர்யா ராஜேஷ்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here