12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்பு

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கடும் தெரிவித்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

வாபஸ்

இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற மே தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்; “12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24 ஆம் தேதி அறிவித்திருந்தோம். இந்த 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக இன்று அறிவிக்கிறேன். 12 மணிநேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது பற்றி அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும். விட்டுக் கொடுப்பதை நான் அவமானமாக கருதவில்லை. பெருமையாகவே கருதுகிறேன். 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக கூறிய பின்னரும் அவதூறு பரப்புகின்றனர். ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான்” என்றார்.

மரியாதை

தொழிலாளர் தினம் இன்று கொண்டாப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here