பத்து தல படத்தில் சாயிஷா நடனமாடிய “ராவடி” பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தொடரும் வெற்றி

சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டி இருக்கும் திரைப்படம் பத்து தல. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால், அவரது ரசிகர்கள் பத்து தல படத்திற்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டு இருக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா பத்து தல படத்தையும் இயக்கியுள்ளார். கன்னட படமான முஃப்தி படத்தின் ரீமேக் தான் இந்த பத்து தல திரைப்படம். கன்னடத்தில் இந்த படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. தமிழிலும் அதேஅளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குத்தாட்டம் போட்ட சாயிஷா

காப்பான், டெடி போன்ற படங்கள் மூலம் பிரபலமான நடிகை சாயிஷா, கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. தமிழில் டெடி படத்திற்கு பிறகு கன்னடத்தில் யுவராத்னா என்ற படத்தில் நடித்திருந்தார் சாயிஷா. அதன்பிறகு முற்றிலுமாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த அவர், குழந்தை பிறப்புக்கு பிறகும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாயிஷா, அடிக்கடி தான் நடனமாடிய வீடியோக்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவார். தனக்கேற்ற கம்பேக்கிற்காக காத்துக்கொண்டிருந்த நடிகை சாயிஷா, பத்து தல படத்தில் ஐட்டம் சாங் ஒன்றுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். “ராவடி” என்ற குத்துப்பாடல் பாடல் வெளியான ஒரே நாளில் 3 மில்லியன் பார்வைகளை பெற்றது.

குஷியில் ஆர்யா

ராவடி பாடலின் வெற்றி குறித்து நடிகை சாயிஷா கூறுகையில், “ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார்கள் என்று சொல்வார்கள். என்னுடைய விஷயத்தில் ஒரு ஆண் இருக்கிறார். பத்து தல படத்தின் தயாரிப்பாளர் எங்கள் வீட்டுக்கு வந்த பொழுது படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இடம்பெறும் பாடல் காட்சியில் யாரை ஆட வைப்பது என்று தெரியவில்லை என்றார். அப்போது ஆர்யா, சாயிஷா மீண்டும் நடிக்கிறார், அவரை வேண்டுமானால் கேளுங்கள் என்றார். ஆர்யா முற்போக்கு எண்ணம் கொண்டவர். எனது கணவராக அவர் அமைந்திருப்பது எனது பாக்கியம். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பணியாற்றுவது ஒரு கனவு போன்றது. என்னுடன் கௌதம் கார்த்திக் நடனமாடியுள்ளார். சிம்புவுடன் இன்னும் நான் பணியாற்றவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள பதிவில் “பெரிய திரையில் மீண்டும் உன்னை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன், நீ சிறந்தவள், இது ஒரு தொடக்கம் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here