நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திட வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிறந்த நாள்

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். காலையில் வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு, மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

மரியாதை

இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்களும் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொண்டர்கள் வாழ்த்து

அதன்பிறகு தொண்டர்களை சந்திப்பதற்காக அண்ணா அறிவாலயம் சென்ற முதலமைச்சர், கலைஞர் அரங்க வளாகத்தில் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். பின்னர் கலைஞர் அரங்கினுள் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். முதலமைச்சருக்கு வாழ்த்து சொல்ல வந்த கட்சி நிர்வாகிகள் புத்தகங்கள், சால்வை, பொன்னாடை, பழங்கள், மரக்கன்றுகள், ரூபாய் நோட்டு மாலைகள் போன்ற பல்வேறு வகையான பரிசு பொருட்களை வழங்கினார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒட்டகம் பரிசளித்து வாழ்த்து கூறினார்.

ஜனாதிபதி வாழ்த்து

பிறந்த நாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்; “நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திட வாழ்த்துகிறேன். மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வாழ்த்துகிறேன்” என்றார். இதேபோல் குடியரசுத் துணை தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நாட்டுக்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன்” என்றார்.

கேரள முதல்வர் வாழ்த்து

கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கேரளா – தமிழ்நாடு இடையேயான பந்தத்தை உறுதிப்படுத்தும் தங்களின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. கூட்டாட்சி, மதச்சார்பின்மை, தாய்மொழியை காக்க முற்படும் உங்கள் நடவடிக்கை பலரை ஈர்த்துள்ளது” என்றார்.

தலைவர்கள் வாழ்த்து 

இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here