தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 16-ம் தேதி புதிய குறைந்த கற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய கற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைதொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு பகுதி இன்று வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வடதமிழகம், புதுச்சேரி கடற்கரை பகுதியில் நிலவுகிறது. இது தொடர்ந்து மேற்கு திசையில் தமிழகம், கேரள பகுதிகளில் கடந்து அரபிக்கடல் பகுதிக்கு செல்லும். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன், ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு பகுதி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது என்றார். பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது என்றும் 6 இடங்களில் அதிக கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கனமழை

இதனிடையே, கனமழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (12.11.2022) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இடிமின்னலுடன் மழை

நாளை (13.11.2022) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை

சென்னையை பொறுத்தவை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

பரவலாக மழை

கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழி (மயிலாடுதுறை) 44 செ.மீ., கொள்ளிடம் (மயிலாடுதுறை) 32 செ.மீ., சிதம்பரம் (கடலூர்) 31 செ.மீ., அண்ணாமலை நகர் (கடலூர்) 28 செ.மீ., சிதம்பரம் (கடலூர்) 27 செ.மீ., புவனகிரி (கடலூர்) 21 செ.மீ., காட்டுமன்னார்கோயில் (கடலூர்) தலா 19 செ.மீ., தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 18 செ.மீ., மயிலாடுதுறை, மணல்மேடு (மயிலாடுதுறை), குறிஞ்சிப்பாடி (கடலூர்) தலா 16 செ.மீ., காங்கேயம் (திருப்பூர்) 15 செ.மீ., பொன்னமராவதி (புதுக்கோட்டை), வெள்ளகோவில் (திருப்பூர்), லால்பேட்டை (கடலூர்) தலா 13 செ.மீ., மிலம்பட்டி (கரூர்), அரவக்குறிச்சி (கரூர்) தலா 12 செ.மீ., உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) செ.மீ., கரையூர் (புதுக்கோட்டை) 11 செ.மீ., வேடசந்தூர் (திண்டுக்கல்), காரைக்கால், திருப்பூர் தலா 11 செ.மீ., விருதாச்சலம் (கடலூர்), வானுர் (விழுப்புரம்), பரமத்திவேலூர் (நாமக்கல்), செய்யூர் (செங்கல்பட்டு), பண்ருட்டி (கடலூர்) தலா 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வட தமிழக கடலோரப் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here