சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை விடுதலை செய்வதில் எந்த சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படமாட்டாது என கர்நாடக அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிறையில் சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா அளித்த சிறை தண்டனையை உறுதி செய்ததுடன், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூ. 10 கோடியும் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களின் தண்டனைக் காலம் வருகிற 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தண்டனைக் காலத்திற்கு முன்பே அவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

சலுகைகள் கிடையாது

இந்நிலையில், நன்னடத்தை விதிகள்படி 129 நாட்கள் சலுகை உள்ளதால் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சசிகலா தரப்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதனை கர்நாடக சிறைத்துறை தீவிரமாக பரிசீலித்து வருவதால், சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. இதனிடையே, சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படலாம் என்ற தகவலை கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மறுத்துள்ளார். சசிகலாவை விடுதலை செய்வதில் கூடுதல் சலுகைகள், சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், சிறைச்சாலை விதிகளின் அடிப்படையிலும் தான் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்றும் பசவராஜ் பொம்மை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here