தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இடியுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்.,28) மற்றும் நாளை (ஏப்.,29) ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழைக்கு வாய்ப்பு
ஏப்.,30 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று (ஏப்.,28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 – 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
பரவலாக மழை
கடந்த 24 மனி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. கொள்ளிடம் (மயிலாடுதுறை) 6 செ.மீ., நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை) தலா 5செ.மீ.,
உத்தமபாளையம் (தேனி), மஞ்சளாறு (தேனி), கழுகுமலை (தூத்துக்குடி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 4 செ.மீ., வலங்கைமான் (திருவாரூர்), சிதம்பரம், பழனி, பெரியாறு (தேனி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), புவனகிரி (கடலூர்), மதுரை விமான நிலையம், புலிப்பட்டி (மதுரை), பட்டுக்கோட்டை, கொடைக்கானல், நீடாமங்கலம் (திருவாரூர்), கும்பகோணம், ராஜபாளையம், ராமநாதபுரம், வெம்பக்கோட்டை (விருதுநகர்), சோத்துப்பாறை (தேனி), தல்லாகுளம் (மதுரை) அகிய பகுதிகளில் தலா 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக” வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.