நான் Incredible இளையராஜா, நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான் என லண்டன் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய இசைஞானி இளையராஜா பெருமையுடன் கூறினார்.
வாழ்த்து
லண்டனில் வருகிற 8 ஆம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த இருக்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.கஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைத்துறையினர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நீங்கள் தான் நான்
இதனைதொடர்ந்து இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா இன்று லண்டன் புறப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; “புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக இசை கலைஞர்களும் உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா லண்டன் அவர்கள் வாசித்து ரசிகர்கள் எல்லாம் கேட்டு மகிழ்ந்து இந்த இசையை வெளியிட இருக்கிறோம். அப்பல்லோ அரங்கில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. இது எனது பெருமை அல்ல. நாட்டின் பெருமை. Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா. நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான். உங்களின் பெருமையைதான் லண்டனில் சேர்க்கப் போகிறேன்” என்றார்.