பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் டூ மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு முடிவு
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியானது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 94.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிர்ச்சி, சோகம்
இந்த நிலையில், பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தயும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகே வசித்து வந்த பிளஸ் 2 மாணவர் ஹரி வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் உடலை கைப்பற்றி தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.















































