போதைப் பொருள் விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த 22 ஆம் தேதி நடந்த தகராறு வழக்கில் பிரசாத் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, பிரசாத் போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. பிரசாத் ‘தீங்கிரை’ என்ற பெயரில் புதிய படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். இதனால் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு கொக்கைன் என்ற போதைப் பொருளை அடிக்கடி பிரசாத் வாங்கி கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தனிப்படை
அதை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நுங்கம்பாக்கம் லேக் வியூ பகுதியில் வசித்து வரும் நடிகர் ஸ்ரீகாந்தை பிடித்து அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘கழுகு’ திரைப்பட நடிகர் கிருஷ்ணா பிரதீப்குமாரிடம் கொக்கைன் வாங்கி பயன்படுத்தியது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு விசாரணை நடத்த நேற்று அழைத்தனர். அப்போது அவர் தான் படப்பிடிப்பு தொடர்பாக கேரளாவில் உள்ளதாகவும், சென்னை வந்ததும் நேரில் வருகிறேன் எனக் கூறியதாக தெரிகிறது. அதன்படி போலீசார் நடிகர் கிருஷ்ணாவிற்கு முறைப்படி சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் நடிகர் கிருஷ்ணா தற்போது தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவரை கைது செய்வதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.