திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளதாக பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
‘மார்கன்’
விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘மார்கன்’. விஜய் ஆண்டனியின் தயாரிப்பு மற்றும் இசையமைப்பில் உருவான இப்படத்தை லியொ ஜான் பால் இயக்கியுள்ளார். இதில் பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மார்கன்’ படத்திற்கான புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் படத்திந் புரோமோஷன் நேற்று மதுரையில் நடைபெற்றது.
சொல்வதற்கு ஒன்றுமில்லை
இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் விஜய் ஆண்டனி பேசுகையில்; “திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட காலமாகவே உள்ளது. சிகரெட் பிடிப்பதும் போதை பழக்கத்தின் ஆரம்ப கட்டமாகும். அதற்குப் பிறகு போதைப்பொருள் பழக்கம் வருகிறது. நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை” என்றார்.போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.