எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்கவில்லை என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

சுவாரஸ்யமான தொடர்

சன் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் எதிர்நீச்சல் தொடருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தினம் தினம் பல திருப்பங்களும், சுவாரசியமான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் தொடராக இருந்தது. இந்தத் தொடரில் நடிகை கனிகா, மறைந்த நடிகர் மாரிமுத்து, மதுமிதா, ஹரிப்ரியா, கமலேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த சீரியல் 400 எபிசோடுகளை கடந்து சாதனைபடைத்ததுடன், டிஆர்பியிலும் முன்னிலை வகித்து வந்தது.

நான் நடிக்கல!

எதிர்நீச்சல் முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டது. முதல் பாகத்தில் நாயகியாக நடிகை மதுமிதா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் அவர் நாயகியாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்நீச்சல் -2ல் நடிக்கவில்லை என மதுமிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “எனது அன்பு ரசிகர்களே, மிகுந்த பணிவுடன் இதனை நான் தெரிவித்துக்கொள்கிறேன். சில குறிப்பிட்ட காரணங்களுக்காக எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் என்னால் தொடர இயலவில்லை. எதிர்நீச்சல் பயணத்தில் என் மீது அன்பும், அக்கறையும் செலுத்திய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருகிறார்.

உறுதியானது

எதிர்நீச்சல் முதல் பாகம் திடீரென முடிந்ததைப் போன்று இருந்ததால், எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் உருவாகும் எனக் கூறப்பட்டது. எனினும் அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. தற்போது எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என மதுமிதா தெரிவித்ததன் மூலம் இத்தொடரின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here