கொரோனாவால் பாதிக்கப்பட்டதும் பிழைக்க மாட்டேன் என பயந்தேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
பயந்தேன்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். பின்னர் வீடு திரும்பிய அவர், ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்றார். இதுபற்றி அவர் கூறியதாவது; எனக்கு கொரோனா தொற்று உறுதியானதும் மிகவும் பயந்து போனேன். சிகிச்சை எடுக்கும்போது மரணமடைந்துவிடுவேன் என்ற எண்ணம்தான் வந்தது. கொரோனா பயம் நிறைய இருந்தது. நிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது. மருத்துவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். அந்த கஷ்டமான நேரத்தில் எனது பெற்றோர்கள்தான் தைரியம் கொடுத்தனர். அந்த நேரத்தில் வாழ்க்கை எவ்வளவு விலை மதிக்க முடியாதது. உயிரோடு இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று தோன்றியது.
தைரியம்தான் பலம்
கபடி விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடித்து வருகிறேன். உடம்பை வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டிய நேரத்தில் கொரோனா வந்து விட்டதே என்று வருத்தமாக இருந்தது. இப்போது தேறி வருகிறேன். கொரோனா வந்தவர்கள் பாதிபேருக்கு பயத்தில்தான் உயிர் போய்விடுகிறது என்று நினைக்கிறேன். அந்த பீதி இல்லாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தைரியம்தான் மனிதனுக்கு பாதிபலம். இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.















































