தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிக கனமழையும், கோவை, தேனி மாவட்டங்களின் ஓருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
பரவலாக மழை
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 34 செ.மீ. மழையும், பந்தலூரில் 19 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. ஹாரிசனில் 18 செ.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அவலாஞ்சி, சோலையாரில் தலா 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சின்கோனாவில் 9 செ.மீ., நடுவட்டம், கூடலூர் பஜார், வால்பாறை வாட்டாட்சியர் அலுவலகம் பகுதிகளில் தலா 8 செ.மீ., மேல் பவானியில் 7 செ.மீ., மேல் கூடலூரில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், மஹாராஷ்டிரா, குஜராத் கடலோரப் பகுதியை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையில் கடல் அலைகள் மூன்றரை முதல் நான்கரை மீட்டர் தூரம் எழும்பக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.